பிடித்தவை

  • புத்தகங்கள்
  • பயணம்
  • குழந்தைகள்

Thursday, June 11, 2020

சகோதர யுத்தம்

என்றோ எழுதிய ஒரு கட்டுரை

சகோதர யுத்தம் என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன்னர் கருணாநிதி வெளியிட்ட ஒரு அறிக்கையின் ஒரு பகுதி

"சகோதர யுத்தத்தினால் நாம் பலவீனப்பட்டு விட்டோம். இன்றைக்கு இலங்கையிலே நடைபெறுகின்ற இந்த அக்கிரமங்களை இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், நாம் பலகீனப்பட்டது தான். இப்படி சகோதர யுத்தத்தால் நாம் பாழ் பட்டு விட்டோம் என்பதை மறந்து விடாமல், அந்த சகோதர யுத்தங்கள் காட்டிய பாடத்தை இப்போது நாம் பெற வேண்டிய பாடமாகப் பெற்று, இப்போதாவது இலங்கை தமிழர்களுக்கு ஒற்றுமையாக இருந்து உதவிகள் செய்ய இந்த கூட்டத்திலே உறுதி எடுத்துக் கொள்வோம் என்றார் கருணாநிதி."


சில நாட்களுக்குப்பின் அவர் வெளியிட்ட மற்றொரு அறிக்கை

"சகோதர யுத்தம் காரணமாக ஒட்டுமொத்தமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை.”வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு போர்முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை அலட்சியப்படுத்தி விட்டனர்’ என, நான் எழுதியது உண்மை தான். இதில் எந்தப் பிழையும் இருப்பதாக நான் உணரவில்லை.
பிரபாகரனால் தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்தது என நான் கூறவில்லை.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்."

பல லட்சகணக்கான மக்களால் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கப்பட்ட ஒரு போராட்டத்தினை "சகோதர யுத்தம் " என்ற வார்த்தை மூலம் திரும்ப திரும்ப இழிவு படுதுகிறாரே என தமிழருவி மணியன் போன்ற அறிஞர்களும் பல்வேறு இணையதளங்களும் கடும் விமர்சனங்களை எடுத்து வைத்தனர்.

கருணாநிதியின் அறிக்கைகளை படித்தபோது, ஆத்திரம் வந்தது, இன்னொரு புறம் என்னுடைய சுயம் என்ற ஆராய்ச்சி நூலுக்கான முக்கியமான ஒரு தலைப்பை கொடுத்ததற்காக அவருக்கு மனதிற்குள் நன்றி சொன்னேன்.

ஒரு உயர் குடும்பத்துக்குள் ஏற்பட்ட மோதல், அப்பாவிப் பத்திரிகை ஊழியர்கள் மூவர் உயிருக்கே உலை வைக்கவில்லையா? இவ்வளவுக்கும் பிறகும் அந்தக் குடும்பத்தில் சகோதரத்துவம் குறைந்துவிடவில்லை.

இப்பொழுது சமீப காலமாக பத்திரிக்கைகளில் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி "தலைவர் கலைஞருக்குப் பிறகு திமுகவில் யாரையுமே நான் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை !" என்று சொன்ன பேட்டியும் பின்பு விமான நிலையத்தில் ''தி.மு.க., தலைமை பதவிக்கான தேர்தல் நடந்தால் அதில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன்'' என்று அறிவித்த பேட்டியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்பொழுது மேலே பதிப்பித்துள்ள கருணாநிதியின் அறிக்கையை திரும்ப படித்து பார்த்தேன். தன் வினை தன்னை சுடும் என்பது போல் தன் வார்த்தை கூட தன்னை சுடும் என தோன்றுகிறது.

இதன் விரிவான கட்டுரை என் நூலில் 27.01.2041ல் வெளியிடப்படும்.

Sunday, July 7, 2013

இளவரசனின் மரணம்

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளவரசன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இளவரசனின் மனைவி திவ்யாவின் தந்தை இறந்ததே இதைபோன்றதொரு சூழ்நிலையில்தான். அதை எல்லா ஊடகங்களும் தற்கொலை என்றே எழுதின, ஏனென்றால் அப்பொழுது நடைபெற்ற கொள்ளை மற்றும் வன்முறை சம்பவங்கள் மீதுதான் அனைவரது கவனமும் இருந்தது, வழக்கம் போல நமது தமிழ்நாடு காவல்துறை எல்லாம் நடந்து முடிந்த பின்னர் வந்து வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்தது.

இப்பொழுதும் இளவரசனின் மரணம் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்திருந்தாலும், பல ஊடகங்கள் இதனை தற்கொலை என்றே எழுதி வருகின்றன, இது தற்கொலையாக இருக்க வாய்ப்பு  மிக மிக குறைவு, இதற்க்கான சில தடயவியல் மற்றும் பொதுவான விசாரணை நடத்தும் முறைகள் அடிப்படையிலான விளக்கங்கள்

1. இளவரசன் உடல் இருந்த நிலையை பார்க்கும்போது , ரயில் முன்பு அவர் விழுந்ததற்கான வாய்ப்பு இல்லை, ஏனென்றால் ரயில் மோதும்போது முதல் தாக்கம் ஏற்ப்படும் இடத்தை பொறுத்தே பிணம் விழக்கூடிய இடம் அமையும், இதில் இளவரசனது இடது முகம் பாதி சிதைந்து மூளை சிதறி உள்ளது, அப்படி என்றால் அவர் உடல் தூக்கி எறியப்பட்ட இடம் தண்டவாளத்தின் மிக அருகிலோ அல்லது தண்டவாளங்களுக்கு இடையிலோ தான் அமைய வேண்டும்.



2. ரயில் மோதியது இடது பக்க முகப்பகுதி என்றால் இளவரசனது உடல் தற்போதுள்ள பக்கத்தில் இல்லாமல் எதிர் பக்கத்தில் இருந்திருக்கும். இது விளக்க சற்று சிக்கலான விஷயம், இதனை அனுபவம் மிக்க காவல் துறை அதிகாரிகளோ அல்லது காவலர்களோ எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

3. ரயில் மோதியதாக இருந்தால், அந்த ரயில் ஓட்டுனர் தனது மேலதிகரிகளுக்கு தகவல் அளித்திருக்க வேண்டும், அதுவும் இங்கு நடக்கவில்லை.

4. அங்கு இருந்த மது பாட்டில்கள் முறையாக கை ரேகை நிபுணர்களால் ஆராயபட வேண்டும்.

5. மரணம் நிகழ்ந்ததாக குறிப்பிடபட்டு உள்ள நேரத்திற்குள் இளவரசனது கை பேசி அழைப்புக்கள் மற்றும் அந்த இடத்தில் உள்ள அனைத்து தொலை தொடர்பு தொடர்பு நிறுவனங்களின் பயனாளர் பட்டியல் பெற பட்டு முழுமையாக ஆராயப்பட வேண்டும்.

6. இளவரசனது உடைகள் இருந்த நிலையும் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறுவதற்கு எள்ளளவும் வாய்ப்பளிக்கவில்லை, வாழ்க்கையை முடித்து கொள்ளும் ஒருவன் எப்படி பொறுமையாக தன்னை அலங்காரப்படுத்தி கொள்ள முடியும்?

7. இத்தனை மாதங்களாக பிரச்சனைகளை எதிர்கொண்ட இளைஞன், அவர் எதிர்பார்த்தது போலவே அல்லது பயந்தது போலவே தன் மனைவி பிரிந்து செல்வதாக கூறியதை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்ததாக சில ஊடகங்கள் எழுதுவது, அதை எழுதியவரின் அறிவின்மையே காட்டுகிறது.

8. சம்பவம் நிகழ்ந்த அன்று அவர் காலையில் இருந்து மிக இயல்பாகவே இருந்துள்ளார், இதனை அவரது தந்தை மற்றும் அத்தையும் உறுதி செய்து உள்ளனர்.

காவல் துறை சற்று ஆழ்ந்து இந்த மரணத்தினை பற்றிய சந்தேகங்களை தெளிவு படுத்தினால் மட்டுமே, தர்மபுரியில் நிரந்தர அமைதி ஏற்படும்.




சற்று முன்பு ஒரு பத்திரிக்கையின் வலைதளத்தில் வந்த செய்தி

"இளவரசன் கொலை செய்யப்படவில்லை தற்கொலை செய்துகொண்டான் என்கிறது அவரது கடிதங்கள்.

தர்மபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் தற்கொலை செய்து கொண்டது கடிதம் மூலம் உறுதியாகியுள்ளது என மாவட்ட எஸ்.பி., அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.

மேலும் அவர், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் இளவரசன் கூறியுள்ள தாகவும் கூறினார்."

Tuesday, November 1, 2011

என்று ஒழியும் ஜாதி என்ற அவலமான எண்ணம்?

ஜாதி அல்லது குலம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் தீர இன்னும் பல தலைமுறை கடந்தாக வேண்டும் என தோன்றுகிறது.

என் 21 வயது வரை ஜாதி என்பதை பற்றி பெரிய அக்கறையோ அல்லது முக்கியத்துவமோ நான் கொடுத்தது இல்லை.

21 வயதில் அரசு வேலையில் சேர்ந்த பின்பு தான், எனக்கு சமூக கட்டமைப்பு மற்றும் அதன் சூட்சுமங்கள் பிடிபட ஆரம்பித்தது.

ஒவ்வொரு சிறு விஷயங்களிலும், என் குலம், என் ஜாதி, என் மதம் என ஒவ்வொருவரும் வெறித்தனமாக சுயநலமாக சிந்திக்க மட்டுமே செய்தார்களே தவிர ஒற்றுமையாக ஒரு விஷயத்தை கூட முழுமையாக செய்தது இல்லை.

பல வருட அரசு பணிக்குப்பின் தகவல் தொழில்நுட்ப பணியில் சேர்ந்த பின் மறுபடி இதைபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்த போது, வெறுத்து பொய் ஒதுங்கி இருக்கத்தான் முடிந்தது.

சமீபத்தில் ஒரு நண்பனின் திருமணத்திற்கு சேலம் சென்றிருந்த போது, திருமணம் முடிந்து மறு வீடு செல்லும் சடங்கில் ஒரு தாழ்த்தப்பட்ட முதியவர் தன மேல்துண்டை விரித்து மணமக்களின் பாதணிகளை அதில் வைத்து விழுந்து கும்பிட்டதை பார்த்து என்னை அறியாமல் என் உடல் நடுங்க தொடங்கியது, ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்து விட்ட அந்த சம்பவம் பல மாதங்கள் ஆகியும் என் மனதை விட்டு நீங்கவில்லை, ஒரு நொடியில் அதை தடுத்திருக்க முடியுமே, ஏன் அதை செய்யமால் பேடித்தனமாய் நின்றிருந்ததை எண்ணி வெட்கப்படுவதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.

இதற்க்கு முன்பும் சக மனிதனின் ஜாதியை கேட்டு அதனை வைத்து அவர்களை மதிப்பிடும் பலரை பார்த்திருந்தாலும், அவர்களை ஒதுக்கி வைப்பதை தவிர, உருப்படியாக எதையும் செய்தது இல்லை.

எப்படி யோசித்து பார்த்தாலும், ஜாதி என்பது முன்பொரு காலத்தில் அவரவர் செய்த தொழிலை வைத்து வகைபடுத்தபட்டதுதானே தவிர, எந்த தொழிலும் உயர்ந்தது தாழ்ந்தது என்ற பேச்சுக்கே இடமில்லையே என்றுதான் தோன்றுகிறது.

கடவுளின் கருவறையில் கலவி மேற்கொண்ட இழிந்தவன் உயர்ந்த ஜாதியா? ஆத்மா சுத்தியோடு தன் உடல் உழைப்பில் வாழும் அடித்தட்டு மக்களின் ஜாதி தாழ்ந்ததா? இந்த மாற்றம் இந்த தலை முறையில் மட்டும் அல்ல, இன்னும் பல தலைமுறைகளுக்கு பிறகுதான் மாறும் என்பது மட்டும் நிதர்சனமாக தெரிகிறது.

ஊர் முழுக்க பாதையை செப்பனிடுவதை விட, என் பாதங்களை பாதுகாத்துகொள்வது முக்கியம் என நினைக்கிறேன். முதலில் என் குடும்பத்தை இந்த இழிவில் இருந்து மீட்பது முக்கியம் என நினைக்கிறேன்.

பிடித்த பாடல்

ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றிவைத்தாய்.

இறகைப் போலொரு வேகத்தில்(2)
வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை தூரத்தில்(2)
பார்க்கின்ற போதெல்லாம் துள்ளுகின்றேன்

நீ எனது உயிராக நான் உனது உயிராக
ஓர் உறவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்

உயிரே நீ பார்த்தாலே உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள் என்னென்னவோ ஆகும்

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ரஞ்சித்

Monday, August 15, 2011

மெல்லத் தமிழினிச் சாகும்

நன்றி - மழலைகள் வலைப்பக்கம்.


பாட்டுக்கொரு புலவன் பாரதியார் "மெல்லத் தமிழினிச் சாகும்"னு சொன்னதாகப் பலபேர் சொல்லிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் அவர் எழுதினதின் நோக்கமே வேறே. அதிலே அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கையாளுவது சற்றுச் சுலபமாக அமைந்து விட்டது நம் எல்லாருக்கும்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றும்,

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்றும்,

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவன் போல், இளங்கோ போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை:
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!"


என்றெல்லாம் கூறியவர் அவர்.




பாரதிக்கு இருந்த ஒன்றுபட்ட, ஒருமித்த கண்ணோட்டத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை. விடுதலைப் பாடலில் கூட மூன்று முறை "விடுதலை! விடுதலை! விடுதலை!" என்று கூறுவது அரசியல், சமூகம், மற்றும் பொருளாதாரம் எல்லாவற்றிலும் நாம் விடுதலையடைய வேண்டும் என்பதினால் தான். "திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து" யாவரையும் நாட்டை உயர்த்தச் சொன்னவன் பாரதி. அப்படிப் பட்ட பாரதி தமிழ் மொழி சாக வேண்டும் என்று சொல்ல மாட்டார் இல்லையா? உண்மையில் அவன் சொன்னது என்னவெனில், தன் மக்களைப் புதிய சாத்திரம் படைக்க வேண்டித் தமிழ்த்தாய் கேட்பதாக அமைந்த அந்தப் பாடலில் இருந்து சில வரிகள் பின்வருமாறு:
"கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!

தந்தை அருள் வலியாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

இது தான் பாரதி சொன்னது. இந்தக் கவிதையில் முதல் ஐந்து செய்யுள்களை விட்டு விட்டு மற்றவற்றை அப்படியே கொடுத்துள்ளேன். இதற்கு மேலும் விளக்கம் நான் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். அப்புறம் கவிதை, "பாரதியார் கவிதைத் தொகுப்பை"ப் பார்த்துத் தான் எழுதி இருக்கிறேன். எனக்குப் படித்தது ஓரளவுக்கு நினைவிருந்தது, ஆனால் கவிதை முழுதும் தவறு செய்யாமல் எழுத வேண்டும் என்பதால் பார்த்தே தான் எழுதி இருக்கேன். பாரதிக்கு இருந்த ஒன்றுபட்ட ஒருமித்த கண்ணோட்டம் இன்றைய நாட்களில் மிக மிக அரிதாக உள்ளது. சுதந்திரத்துக்காகப் பள்ளுப் பாடிய பாரதி, "ஆனந்த சுதந்திரம் அடைய"த் தான் பாடினான். நாம் பெற்றது ஆகஸ்ட் சுதந்திரம். அதைத் தான் நாம் கொண்டாடுகிறோம். இன்னும் சொல்லப் போனால் ஆகஸ்ட் சுதந்திர நன்னாளிலோ அல்லது இந்தியா என்று சுதந்திரம் அடைகிறதோ அன்று தலை நகர் டெல்லியில் செங்கோட்டையில் பிரதம மந்திரி கொடி ஏற்ற வேண்டும் என்று முதன் முதல் சொன்னவரே, "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்" அவர்கள் தான். நாம் பாரதியையும் புரிந்து கொள்ள வில்லை. நேதாஜியையும் புரிந்து கொள்ள வில்லை. ஆகவே தான் நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்துக்கு இன்னும் விடியவில்லை.

ஒரு நண்பர் கேட்ட கேள்வி என்னோட மனசை உறுத்திட்டே இருந்தது. அவர் சொன்னது: "உங்களுக்கு நல்ல ஆசிரியர் கிடைச்சாங்க. நல்லா எடுத்துச் சொல்லிப் புரிய வச்சாங்க. நல்லாப் புரிஞ்சது. எங்களுக்கு அப்படிக் கிடைக்கலை. தவிர எந்தச் சந்தர்ப்பத்தில் பாரதி இந்தப் பாடல்களப் பாடினார், கவிதை ஊற்று எப்படி எல்லாம் பெருக்கெடுத்து ஓடியது போன்ற விவரம் தெரியாமல் சும்மா தேர்வுக்காகப் படிச்சுத் தான் எழுதினோம்"னு சொல்கிறார். தவிர வேறொரு அன்பர் பாரதிக்குப் பயம் அவனோட அச்சத்தைத் தான் இப்படி வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறான் என்று என்னுடன் மூன்று நாளாக விவாதம். 2 நாளாய் மனசில் யோசனை ஓடிக் கொண்டே இருந்தது. அப்போது தெளிவுக்காக வழக்கமாய் எடுக்கும் பாரதியின் புத்தகங்களான கவிதைத் தொகுப்புக்குப் பதில் நான் எடுத்தது தங்கம்மாள் பாரதியின் "பாரதியும் கவிதையும்" என்ற புத்தகம். சரி, பரவாயில்லை எனப் பிரித்தால் 2வது கட்டுரையே நம் கேள்விக்குப் பதில்.

இப்போ இந்தப் புத்தகம் பற்றி ஒரு சிறு அறிமுகம். தங்கம்மாள் பாரதி, தேசீயக் கவி சுப்பிரமணிய பாரதியாரின் மூத்த மகள் ஆவார். இவர் பாரதியைப் பற்றிச் சில புத்தகங்கள் எழுதி உள்ளார். தன் தகப்பானாரான பாரதியின் சில அனுபவங்களையும், அவர் எழுதிய சில முக்கியமான கவிதைகளைப் பற்றியும் கூறி இருக்கும் இவர் அது எழுதப்பட்ட சந்தர்ப்பத்தையும் கூறி இருக்கிறார். அநேகமாய்ப் பாரதி புதுச்சேரியில் வசித்த நாட்களில் நடந்த சம்பவங்களையே இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் புத்தகம், "காரைக்குடி, புதுமைப் பதிப்பகம் லிமிடெட்"ஆல் வெளியிடப்பட்டது. அச்சிட்டது "சாது ப்ரஸ், ராயப்பேட்டா, சென்னை". வெளியிட்ட வருஷம் மார்ச் மாதம் 1947ம் வருஷத்தில். எனக்குக் கிடைத்தது பழைய புத்தகக் கடையில் பள்ளி நாட்களில். அப்போது இருந்தே இந்தப் புத்தகத்தை அவ்வப்போது படித்து வந்தாலும் இந்தக் கவிதை எழுதும்போது நினைவுக்கு வரவில்லை. எப்படி மறந்தேன் என்று புரியவில்லை. பின் யோசனையுடன் 2 நாட்களாய்த் தேடிய புத்தகங்களில் இந்தக் கவிதை எழுதிய சூழ்நிலை பற்றிய சான்று தேடும்போது கிடைத்தது. பிரிக்கவும் கிடைத்தது சான்றோடு முழுக் கவிதையும்.

பாரதியார் புதுச்சேரியில் இருக்கும்போது பாடப் பட்டதாய்க் கூறுகிறார் ஸ்ரீமதி தங்கம்மாள் பாரதி இந்தக் கவிதையை. அவர் கூறும் வார்த்தைகளிலேயே:

"ஒருநாள் சென்னையில் இருந்து சில நண்பர்கள் தந்தையாரைப் பார்க்க வந்தார்கள். அதில் இருவர் "ஆங்கில பாஷையிலும்", "சயன்ஸிலும்" மோகம் கொண்டவர்கள். கிணற்றடியில் அப்போது தந்தை ஸ்நானம் செய்து கொண்டிருந்தார். நண்பர்கள் மாடியிலிருந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தனர்.

முதலாவது நண்பர்:- என்னப்பா? பாரதியாருக்குத் தமிழில் மோகம் அதிகமாமே! தமிழில் என்ன இருக்கிறது? கருத்துக்களை ஆங்கிலத்தில் சொல்வது போல, தமிழில் சொல்ல முடியவில்லை. அதற்கேற்ற அழகான சொல் தமிழ் மொழியில் ஏது?

இரண்டாம் நண்பர்:- அது மட்டுமா? "ஸயன்ஸ்" எத்தனை உயர்ந்தது? தமிழில் இருக்கிறதா? வெள்ளைக்காரன் எப்படியிருந்தாலும் கெட்டிக்காரன். எத்தனை புதிய மெஷின்கள்! எத்தனை கருவிகள்! எத்தனை வஸ்துக்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்! எத்தனை சாஸ்திரங்கள் கற்கிறார்கள்!

முதலாவது நண்பர்:- ஆமாம். இன்னும் சிறிது நாளைக்குள் மேற்கு தேசத்துப் பாஷைகள் நாடெங்கும் விரிந்து பரவிவிடும். தமிழ் ஒளிமங்கி மறைந்து விடும்.

இரண்டாம் நண்பர்:- ஆம், ஒருவரும் அதில் சிரத்தை இல்லாமலிருந்தால் விரைவில் அழிந்து விடும்."

மேலே கூறிய சம்பாஷணைகளை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் அப்பா. கேட்டவுடன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய்ப் பெருகிற்று. தனக்குள்ளாகவே பேசிக் கொண்டார்.

"ஆம், வாஸ்தவம் தான். தாயை மதியாத நம் தமிழனின் அசிரத்தையால் தமிழ் அழியும். கோழைகளே! பழம் பெருமையோடு திருப்தியடைந்து, உண்பதும் உறங்குவதுமாகக் காலங் கழிக்கிறீர்களே! என்ன கொடுமை! ஒருவனாவது நாட்டு நிலைமையைப் பற்றி யோசிக்கிறானா! நமது நிலை இத்தனை கீழ்த்திசை யடைந்திருக்கிறதே என்று சிந்தித்துப் பார்க்கிறானா? தாய்மொழியில் பேசுவதும் எழுதுவதும் கேவலமென்று கருதி தெரியாத ஆங்கிலத்தில் உளறினாலும் மதிப்பு என்று நினைக்கிறார்கள்! சேர, சோழ, பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழின் பெருமையை அறியாத பேதைகள்! இலக்கிய வளர்ச்சியில் ஒருவரது மூளையும் செல்வதில்லை. பிழைப்புக்காகக் கட்டாயமாக ஆங்கிலம் கற்று அதிலுள்ள சுவையைப் புகழ்கிறார்களே! "

இவ்விதம் புலம்பிப் பின் மாடியிலுள்ள நண்பர்களிடம் சென்றார். "தம்பிமாரே! என்ன சொன்னீர்கள் நம் தாய்மொழியைப் பற்றி? மெல்ல மெல்லத் தமிழ் இறந்து விடும் என்கிறீர்கள்! ஒருநாளும் அவ்விதம் ஆகாது. தமிழ்மொழி மங்காது. இன்னும் சிறிது காலத்தில் தமிழர்கள் விழித்தெழுவார்கள். அப்போது தமிழ் மொழி புதுமைப் பொலிவுடன் பிரகாசிக்கும். இதோ கேளுங்கள்! தமிழ்த் தாய் தோன்றிய விதம் யாரும் அறியார்கள்!' என்று கூறிவிட்டுப் பாட ஆரம்பிக்கிறார்.

"யாவரும் வகுத்தற்கரிய பிராயத்தள்
ஆயினுமே எங்கள் தாய் - இந்தப்
பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப்
பயின்றிடுவாள் எங்கள் தாய்" எங்கள் தாய்!"

என்று கூறி விட்டுக், "கேளுங்கள், சகோதரரே! தமிழ்த் தாய் கூறுவதைக் கேளுங்கள்!" என்று கோபமும், ஆத்திரமும், சோகமும் கலந்த குரலில் பாடுகிறார் தமிழ்த் தாயின் வேண்டுகோள் நிறைந்த பாடலை. பாரதியா அஞ்சுகிறவன்?


Sunday, April 3, 2011

செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே

நம்ம கூட்டாளி வெட்டி பயலோட நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் அழைப்பிதழுக்காக தேடிய போது இந்த பாடல் படித்தேன், அற்புதமான பாடல், இருவர் படத்தில் கேட்கும்போது இதன் அர்த்தம் புரியவில்லை, திண்ணை வலைத்தளத்தில் இதன் அர்த்தம் படித்தேன், உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். படித்து ரசிக்கவும்.

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
(குறுந்தொகைப் பாடல் எண் நாற்பது. ஆசிரியர் செம்புலப்பெயனீரார்.)

பாடல் விளக்கம்.
"என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் சிவந்த நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன".

Wednesday, November 17, 2010

அனுபவம் என்பது தவறுகளின் தொகுப்பு.

வாழ்க்கையில் வென்ற நிறைய மனிதர்கள், தங்கள் தவறுகளில் இருந்தோ அல்லது அடுத்தவர்களின் தவறுகளை பார்த்து அவற்றை கவனமாக தவிர்த்தோ முன்னேறியதாக கூறுவதை கேட்டிருக்கிறேன். என்னுடைய வாழ்வின் பக்கங்களை புரட்டி பார்க்கும்போது நானும் அப்படி சில நிகழ்வுகளை கடந்திருக்கிறேன். அப்படிப்பட்ட சில சம்பவங்களை இங்கு பதிவு செய்கிறேன்.

Friday, November 12, 2010

நான் கரை ஏறி விட்டேன்

மனிதர்களை அவர்களின் புற தோற்றத்தை வைத்து எடை போடுவது தவறு என எனக்கு புரிய வைத்த ஒரு சம்பவம்.

1999 வது வருடம் மே மாதம் ஒரு நண்பரின் திருமணத்திற்காக கும்பகோணம் சென்று, பின் அங்கிருந்து தஞ்சாவூர், பிச்சாவரம் முதலிய இடங்களை சுற்றி பார்த்து விட்டு வந்தோம். அப்பொழுது பிச்சாவரத்தில் இருந்து தஞ்சாவூர் வரும்போது பேருந்தில் சிறுவர்கள் சிலர் கட்டுமான பணிக்கு போகும் உபகரணங்களோடு வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது நான் என் அருகில் இருந்த சிறுவனிடம் "தம்பி, படிக்கும் வயதில் இப்படி வேலைக்கு போனால் பிறகு உன் எதிர் காலம் என்ன ஆகும் என் அறிவுரை கூற முற்பட்டேன்.

உடனே அவன் கோபமாக "நான் படிக்கலேன்னு யார் சொன்னா? நான் அரசு பள்ளிகூடத்துல நாலாப்பு படிக்கிறேன், விடுமுறைல வேலைக்கு போய் அந்த காசுல என் கல்வி கட்டணம் கட்டுவேன் மற்றும் புத்தகம் வாங்க உபயோகபடுத்தி கொள்வேன்" என்று சொன்னான். ஒரு இரண்டு வினாடி எனக்கு ஒன்றுமே புரியவில்லை,

வேதம் புதிது படத்தில் அய்யர் வீட்டு சிறுவன் முற்போக்குவாதியான பாலுத்தேவரிடம் "உங்க பேர் என்ன?" என்பான்.
அதற்கு அவர் " பாலுத்தேவர்" என கம்பீரமாக சொன்னதும் "பாலுங்கறது உங்க பேரு தேவர்ங்கறது நீங்க படிச்சி வாங்குன பட்டமா, ஜாதி இல்லே ஜாதி இல்லேன்னு சொல்ற நீங்களே மூச்சுக்கு முந்நூறு தடவ இத சொல்றீங்களே" என சிறுவன் கேட்டதும் பளார் பளார் என கன்னத்தில் அறைந்தது போலிருக்கும் பாலுத்தேவருக்கு.

இதே நிலைமையில்தான் நானும் இருந்தேன். அசிங்கபட்டாண்டா அண்ணன்.

இதே போன்று ஐரோப்பாவில் நடந்த ஒரு சம்பவம், ஒரு திறமை அறியும் நிகழ்ச்சிக்கு வரும் சூசன் பைல் என்ற 47 வயது பெண்ணிடம் நீங்கள் யாரை போல் ஆக வேண்டும் என்று கேட்கும்போது, நான் சலின் பேஜ் எனும் பாடகியை போல வரவேண்டும் என அந்த பெண் சொன்னதும் அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் ஏளனமான சிரிப்பை வெளிப்படுத்துவார்கள். அனால் அந்த பெண் பாட தொடங்கிய அடுத்த சில நொடிகளில் மொத்த அரங்கமே எழுந்து நின்று கை தட்ட ஆரம்பிக்கும், அந்த பெண் பாடி முடித்த பிறகு நடுவர்களில் ஒருவர் அப்படி நடந்ததற்கு மன்னிப்பும் கேட்பார்.

இந்த சுட்டியில் அந்த வீடியோவை காணலாம்.

http://www.youtube.com/watch?v=cf42Q7taBsk

Friday, October 22, 2010

வேல்




கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் எப்பொழுது வேலினை பார்த்தாலும் ஒரு அமைதி மனதில் உண்டாகிறது.

வேலினை பற்றி சொல்லவேண்டுமானால் அது உருவாகிய கதை அனைவரும் அறிந்திருப்பீர்கள், ஆனால் நான் அதை பற்றிய விளக்கத்தை ஒரு திரைப்படத்தில் (சாரதா) பார்த்த நினைவு.

அறிவு என்பது எந்த ஒரு விஷயம் ஆனாலும் முதலில் ஆழ்ந்தும், பின் அதனை பற்றிய சாதக மற்றும் பாதகமான விஷயங்களை அறிந்து குறுகிய நோக்கம் இல்லாமல் அகன்று யோசித்தும் சிறந்த முறையில் முடிவெடுக்க இறுதியில் கூர்மையாகி இருக்க வேண்டும். எனவே வேல் என்பது மேற்சொன்ன விதத்தில் சிறந்த அறிவின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது.

Friday, September 24, 2010

பணம்

நண்பனொருவனிடம் கடனை பற்றி பேசப்போகும் அவசரத்தில் இந்த தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

பணம் என்பது மனிதனுக்கு முக்கியம் என்பது குழந்தைக்கு கூட தெரியும், ஆனால் தற்பொழுது மனிதர்களுக்கு பணத்தின் மீதான ஆவல் அளவ்ற்றதாயும், அதை விட முக்கியமாக அவர்களின் அறிவை மழுங்க செய்து விட்டதாக நினைக்கிறேன்.

எனக்கு தெரிந்து மாதம் லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் சிலர் என் இன்னும் சில்லரைதனமாய் நடந்து கொள்கிறார்கள் என புரியவில்லை.

பிறரை ஏமாற்றி சம்பாதித்து நான் உயர்வதை என்றைக்கும் நான் விரும்பவில்லை, அப்படி ஏமாற்றும் நபர்களை கண்டாலே எனக்கு நரகலை தொட்ட அளவுக்கு அருவெறுப்பு உண்டாகிறது.

நான் பார்த்த சில அநியாயமான தொழில்கள்.

1. அரசு அதிகாரிகள்.
2. நிலம் மற்றும் வீடு தரகர்கள்.
3. ஆட்டோ ஒட்டுநர்கள்.

தீக்குளிப்பதற்கு முன் விநியோகித்த முத்துகுமரனின் இறுதி அறிக்கை

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே...

உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

Wednesday, April 28, 2010

சுமைதாங்கி


கிராமங்களில் சாலை ஓரங்களில் கருங்கல்லால் ஆன சுமைதாங்கி எனப்படும் மேடைகளை பார்த்திருப்பீர்கள்.

வாகன வசதி இல்லாத அந்நாட்களில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நடந்து செல்லும்போது தங்கள் தலை சுமையை இறக்கி வைக்க பயன்படுத்தபட்டவைதான் இவை.

மருத்துவ வசதி இல்லாத அந்நாட்களில் கருவுற்ற பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக் கொள்ளும்முன் இறந்துவிட்டால் அவளுக்காக சாலை ஓரங்களில் சுமைதாங்கிகல் அமைப்பது வழக்கமாக இருந்தது.

இதில் மக்கள் தங்கள் சுமைகளை இறக்கி வைக்கும்போது தங்கள் உடல் வலி குறைந்து களைப்பு நீங்கும்போது, வயிற்றுசுமையுடன் இறந்த கர்ப்பிணி பெண்ணின் துன்பம் நீங்கி அவள் ஆத்மா சாந்தி அடைவதாக ஒரு நம்பிக்கை.

நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

Sunday, April 11, 2010

இன்றைய சூழ்நிலையில் குடும்பங்களில் நிலவும் சுயநலம் மற்றும் பேராசை காரணமாக, மனிதர்களின் உணர்வுகளை நாம் எப்படி கொன்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான சாட்சி.

இதில் சொல்லப்பட்ட எந்த மனிதராக ஒரு விநாடி நான் வாழ்ந்தாலும், அடுத்த வினாடி என் உயிர் நீங்கி விட வேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்த பெண்மணியை போல் சேவை மனப்பான்மையோடு ஒரு முதியோர் இல்லம், நானே உழைத்து விளைவிக்க கொஞ்சம் விவசாய நிலம் இவை இருந்தால் வாழ்க்கையின் ஆடம்பர தேவைகள் இல்லாமலே நிம்மதியாக வாழலாம் என தோன்றுகிறது.

Saturday, April 10, 2010

தாயை பற்றிய மிக உருக்கமான பாடல்

பொதுவாக உலகின் எல்லா தாயும் சிறந்தவர்களாகவும், பிள்ளைகள் எதிர்மறையாகவும் கூறப்படுவதுண்டு. எனக்கு இதில் நான் கண்ட சில குடும்பங்களின் மூலமாகவும், சுய அனுபவங்களாலும் மாற்று கருத்து இருந்தாலும், இந்த பாடல் ஒரு ஆழமான வலியை ஏற்படுத்துகிறது.

இப்போதெல்லாம் நான் என் தாயுடன் சண்டையிடும் சூழ்நிலையில் கோபத்தில் வரம்பு மீறி வார்த்தைகள் பேசும் சூழ்நிலை வந்தால், அப்போது இந்த பாடலை கேட்டு என்னை நானே அமைதிபடுத்தி கொள்கிறேன்.

Friday, April 2, 2010

ஒரு குடும்பத்தினை பற்றிய பதிவு

இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் நடந்த நடந்து கொண்டிருக்கின்ற உண்மை சம்பவங்கள்

நியூ ஆவடி ரோடு வழியாக செல்பவர்கள் மின் மயானம் தாண்டியதும் சாலையின் வலதுபுறம் தொடர்ந்து வரும் குடிசை மற்று வாரிய குடியிருப்புகளை காணலாம், நான் இந்த பகுதியில் பிறந்து வளர்ந்தவன்.

இங்கு நான் பார்க்கும் ஒரு குடும்பத்தினை பற்றிய பதிவுதான் இது

பஞ்சமா பாதகங்கள் ஆன கொலை, பொய், களவு, கள்ளூண், அவமரியாதை (குருநிந்தை) அனைத்தையும் இந்த குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

இவர்கள் சம்பந்தபட்ட அனைத்து தகவல்களையும் திரட்டி வருகிறேன்.

தகுந்த நேரத்தில் அனைத்து தகவல்களையும் வைத்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் என்னுடைய புத்தகத்தில் இவர்கள் அனைவரது செயல்களின் பலன்களையும் பதிவு செய்ய போகிறேன்.

Sunday, March 7, 2010

அனைத்து குழந்தைகளுக்காக மற்றும் பெரியவர்களுக்காக

வாழ்கையில் குழந்தைகளுக்கு இந்த ஆத்திசூடியை தகுந்த விளக்கங்களுடன் சொல்லி தந்தாலே அவர்களின் ஆளுமை திறன் மேம்படும்.

நம்மை சுற்றி நடக்கும் அனைத்து அநியாயங்களையும் எந்த விதமான அக்கறையும் இன்றி மெய், வாய், செவி மூடி கடந்து செல்லும் இருக்கும் பெரியவர்களுக்கு இதனை தினம் சில முறை சொல்ல சொல்லி அவர்களின் சமூக அக்கறையை மேம்படுத்தலாம்.

ஆத்திசூடி - ஆசிரியர்: ஔவையார்

கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஔவியம் பேசேல்
13. அஃகம் சுருக்கேல்

உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல்
15. ஙப் போல் வளை
16. சனி நீராடு
17. ஞயம்பட உரை
18. இடம்பட வீடு எடேல்
19. இணக்கம் அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செய்யேல்
25. அரவம் ஆட்டேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செய்யேல்
29. இளமையில் கல்
30. அரனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்

ககர வருக்கம்
32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப்பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கௌவை அகற்று

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்து இரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளிக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சேரிடம் அறிந்து சேர்
52. சையெனத் திரியேல்
53. சொற் சோர்வு படேல்
54. சோம்பித் திரியேல்

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒட்டி வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொன்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்

நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பிரியேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெற்பயிர் விளைவு செய்
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல

பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதைமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் புரியேல்

மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93. மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
95. மேன்மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி

வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்

பிடித்த கவிதை

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

- மகாகவி சுப்ரமணியபாரதி

Thursday, March 4, 2010

இந்த இடுகையினை போட்டதற்கான காரணம்

"சுயம்"

இந்த தலைப்புல ஒரு புத்தகம் எழுதனும்னு ஆசை.


ஆனா அந்த அளவுக்கு சொந்த சரக்கு இல்லாததால

என்னை சுத்தி இருக்கும் நெறைய மனிதர்களை, சம்பவங்களை

பதிவு பண்ண ஒரு தற்காலிகமான "திண்ணை" இது.



நான் முழுகால் சட்டை போடும்போது,

உள்ளாடை கூட போடாம அலைஞ்ச சின்ன பசங்க எல்லாம் பிளாக் எழுதி

என்னோட தன்மானத்தை உசுப்பி விட்டது ஒரு காரணம்.


பின்குறிப்பு - பின்னாடி இது மொத்தத்தையும் தொகுத்து ஒரு புத்தகம் எழுதி அதுக்கு
சாகித்ய அகாடமி, புக்கர், புலிட்சர் விருதெல்லாம் கிடைக்க போவதால்
இந்த வலை பக்கத்தின் எந்த பகுதியையும் மறு பிரசுரம் செய்ய
வேண்டாம் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

மீறினால் நீங்களே பார்த்து தகுந்த சன்மானத்தை எனக்கு அனுப்பி
வைக்கும்படி கேட்டு கொள்கிறேன்.